செய்திகள்
கண்மாயில் மூழ்கி இறந்த சிறுமிகள்

மதுரை அருகே தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

Published On 2021-10-16 08:31 GMT   |   Update On 2021-10-16 08:31 GMT
மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலூர்:

மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டியை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் ஆண்டிச்சி (வயது 14). அவர் செட்டியார்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த அய்யனார்-சிந்து தம்பதியின் மகள் சவிதா (11). இவர் மேலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஆயதபூஜை விடுமுறையை முன்னிட்டு இன்று காலை ஆண்டிச்சி, சவிதா ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த பெண்களுடன் அருகில் உள்ள சிறுவாழை கண்மாய்க்கு குளிக்க சென்றனர். தொடர் மழை காரணமாக அந்த கண்மாய் முழமையாக நிரம்பி இருந்தது.

ஆண்டிச்சி, சவிதா ஆகியோர் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கியதாக தெரிகிறது. இதில் தண்ணீரில் மூழ்கிய 2 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.

கண்மாயில் குளித்த மற்ற பெண்கள், சிறுமிகள் 2 பேரும் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தண்ணீரில் மூழ்கியது தெரியவரவே உடனே அங்கிருந்தவர்கள் கண்மாயில் குதித்து 2 சிறுமிகளையும் மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் ஆண்டிச்சி, சவிதா ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கண்மாயில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News