செய்திகள்
சஸ்பெண்டு

மதுரையில் டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்டு- கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பறிமுதல்

Published On 2021-10-07 04:56 GMT   |   Update On 2021-10-07 04:56 GMT
அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலை வைத்து மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் 15 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் வந்தன.

இந்த நிலையில் மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண்குமார் மதுரை சத்தியமூர்த்தி நகரில் உள்ள டாஸ்மாக் கடை எண்.5587-ல் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபாட்டில்கள் ரூ.70 அதிகம் வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த கடையின் மேற்பார்வையாளர் முத்துக்குமாரசாமி, விற்பனையாளர் ஜெயராஜ் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதேபோல் காளவாசல் சந்திப்பு தேனி சாலையில் உள்ள கடை எண்.5588-ல் ஆய்வு நடத்தியபோது ரூ.200 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் மேற்பார்வையாளர் ராஜா, விற்பனையாளர்கள் வேல் பாண்டி, இளமாறன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

மேலும் இந்த கடையில் சம்பந்தமே இல்லாத நபரை விற்பனையில் ஈடுபட வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி காலை 10 மணிக்கு ஆய்வு செய்தார். அப்போது விற்பனை தொடங்கப்படாத நிலையில் கல்லாபெட்டியில் 59 ஆயிரத்து 880 ரூபாய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்குரிய கணக்கு இல்லை. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு கடையின் பணியாளர்கள் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீசு அனுப்பப்பட்டது.

மதுபான கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்தாலும், அந்நிய நபர்களை கடையில் பணிபுரிய அனுமதித்தாலும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கடைகளில் பண குறைபாடு மற்றும் மதுபான வகைகளை அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News