செய்திகள்
குட்கா பதுக்கியதாக கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கிய 32 மூட்டைகள் குட்கா பறிமுதல்

Published On 2021-09-30 04:53 GMT   |   Update On 2021-09-30 04:53 GMT
விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 250 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதற்காக மதுபாட்டில்கள், மற்றும் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி விழுப்புரம் அருகே ஆரோவில் போலீஸ் சரகத்திற்க்கு உட்பட்ட கலைவாணர் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேகர்பாபு, அன்பரசன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள குடோனில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 மூட்டைகளை போலீசார் கண்டுபிடித்தனர். மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் குடோனில் இருந்து ரூ 3.20 லட்சம் ரொக்கப்பணம் 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கிருந்து தப்ப முயன்ற 3 பேரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் புதுவை மாநிலம் சின்ன சுப்பையா நகர் பகுதியை சேர்ந்த மோகன்லால் (வயது 23), தென்னார் சாலை பகுதியைச் சேர்ந்த மகேந்தர்(36) மற்றும் பெங்களூர் பகுதியை சேர்ந்த ராஜாராம் (30) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இந்த குட்கா பொருட்களை பெங்களூரு பகுதியில் இருந்து புதுவை மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இவர்கள் இந்த பொருட்களை உள்ளாட்சி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய இருந்ததாக தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News