உசிலம்பட்டி அருகே மின் வாரிய அலுவலகத்தில் அதிகாரி தற்கொலை
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 51). இவர் பேரையூர் அருகே உள்ள சின்னகட்டளை துணை மின் நிலைய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு இவர் பணியில் இருந்தார். இரவு சேடபட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சின்னசாமி ஊழியர்களுடன் சேர்ந்து இரவு 12 மணி வரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் மற்ற ஊழியர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
சின்னசாமி மட்டும் அலுவலகத்திலேயே தங்கினார். இந்த நிலையில் இன்று காலை மின்வாரிய ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது அலுவலகத்தில் உள்ள அறையில் சின்னசாமி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சேடப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சின்னசாமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை தேடினாரா? அல்லது மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சின்னசாமிக்கு நதியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் சின்னசாமி உடலை பார்த்து கதறி அழுதனர்.
மின் வாரிய அலுவலகத்தில் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.