செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரத்து 808 கன அடியாக சரிவு

Published On 2021-09-18 04:42 GMT   |   Update On 2021-09-18 04:42 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 2 அணைகளில் இருந்தும் 18 ஆயிரத்து 961 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று காலை 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரத்து 500 கனஅடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 17 ஆயிரத்து 899 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 14 ஆயிரத்து 808 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

நேற்று 74.27 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 74.07 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News