செய்திகள்
கொலையுண்ட சூர்யா- தாய் துர்கா- கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணன்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை காதலனை ஏவி கொன்ற தாய்

Published On 2021-09-16 10:14 GMT   |   Update On 2021-09-16 10:14 GMT
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி தாயே கொலை செய்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். நெல் அரவை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு சூர்யா (வயது 14), சந்தோஷ் என்ற மகன்களும் மகள் சுதி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சூர்யா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

துர்காவுக்கும் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்கா கணவரிடம் கோபித்துக் கொண்டு 3 குழந்தைகளுடன் பொன்னேரியை அடுத்த நத்தம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மாணவன் சூர்யா திடீரென மாயமானான். அவனை உறவினர்கள் தேடி வந்தனர். அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இதுபற்றி சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கோவில் குளத்தில் அழுகிய நிலையில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைந்து இருந்ததால் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்திருந்தனர்.

சிறுவன் சூர்யா மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது நெடுவரம்பாக்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (21) என்பவர் கடைசியாக சூர்யாவை சைக்கிளில் அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் சூர்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை கோவில் குளத்தில் வீசி இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னரே கோவில் குளத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் சிறுவன் சூர்யா என்பது போலீசாருக்கு தெரிந்தது.

சூர்யாவின் தாய் துர்காவுக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. நெடுவரம்பாக்கத்தில் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்ததால் நெருக்கம் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்காவும் கோபாலகிருஷ்ணனும், தனிமையில் உல்லாசமாக இருந்ததை சிறுவன் சூர்யா பார்த்துவிட்டதாக தெரிகிறது.

இதன் பின்னர் சூர்யா தனது தாய் துர்காவிடம் இதுபற்றி தந்தை மற்றும் உறவினர்களிடம் கூறப்போவதாக தெரிவித்து இருக்கிறான்.

இதனால் பயந்துபோன துர்கா மகன் என்றும் பாராமல் சூர்யாவை தீர்த்து கட்ட கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார்.

அவர்களது திட்டப்படி கடந்த 9-ந்தேதி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சூர்யாவிடம் நைசாக பேச்சு கொடுத்து கோபாலகிருஷ்ணன் தனது சைக்கிளில் அழைத்துச் சென்று இருக்கிறார்.

பின்னர் கோவில் குளம் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, கோபாலகிருஷ்ணன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவன் சூர்யாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சூர்யா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சூர்யாவின் உடலை கோவில் குளத்தில் வீசிவிட்டு கோபாலகிருஷ்ணன் தப்பி சென்றுவிட்டார். மகன் கொலை செய்யப்பட்டுவிட்டதை கள்ளக்காதலன் மூலம் அறிந்த துர்கா எந்தவித பதட்டமும் இல்லாமல் இருந்துள்ளார்.

உறவினர்கள் சூர்யாவை தேடும்போது அவரும் சோகத்தில் தேடுவதுபோல் நடித்தார். துர்கா மீது உறவினர்கள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

சிறுவன் சூர்யாவை கோபாலகிருஷ்ணன் சைக்கிளில் அழைத்து செல்வதற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு சிறுவனிடம் சூர்யாவை அழைத்து வருமாறு கூறியுள்ளார். போலீசார் விசாரணையில் இது தெரிந்ததும் கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்தபோது அவரது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தது.

இந்த கொலை தொடர்பாக கோபாலகிருஷ்ணன், சிறுவனின் தாய் துர்கா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி தாயே கொலை செய்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News