செய்திகள்
பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் பயிலும் கோட்டூரை சேர்ந்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்

ஆன்லைன் மூலம் படிக்க முடியாத மாணவர்களுக்கு வீடு தேடி சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

Published On 2021-07-31 04:30 GMT   |   Update On 2021-07-31 04:30 GMT
கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். ஸ்மார்ட் போன் வசதியில்லாத மாணவர்கள் பாடம் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியத்தில் பெத்தநாயக்கனூர் உள்ளது. இந்த ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெத்தநாயக்கனூர், கோட்டூர், தென் சித்தூர், கெங்கம்பாளையம், மேட்டுக்காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 155 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். ஸ்மார்ட் போன் வசதியில்லாத மாணவர்கள் பாடம் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் கல்வி கற்பது தடைபடும் என நினைத்த அந்த பள்ளியில் பணிபுரியும் தமிழ் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ஸ்மார்ட் போன் வசதியில்லாத ஏழை மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்க முடியவில்லை.

அந்த மாணவர்களின் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக பள்ளி தலைமையாசிரியர் ஒத்துழைப்புடன் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோவில், திருமண மண்டபம், சமுதாய கூடங்களில் ஒரு குழுவுக்கு 8 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளி விட்டு பாதுகாப்பான முறையில் அமர வைத்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை பாடம் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக தமிழ் மற்றும் அறிவியல் பாடங்கள் நடத்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக அனைத்து பாடங்களும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News