செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக சரிவு

Published On 2021-07-29 05:17 GMT   |   Update On 2021-07-29 05:17 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:

கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அந்த அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரண்டு அணைகளில் இருந்தும் தற்போது 28,272 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 34 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 29 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்று காலை சுமார் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 29 ஆயிரத்து 666 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 22 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கனஅடி பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 79.15 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 80.24 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரேநாளில் 1 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News