செய்திகள்
சென்னை மாநகராட்சி

பூங்காக்களை பராமரிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Published On 2021-07-27 05:43 GMT   |   Update On 2021-07-27 05:43 GMT
பூங்காக்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரமும், தென்மேற்கு பருவமழை காலத்தின் போது இருமுறை, வடகிழக்கு பருவ மழையின் போது பூச்சிகொல்லி மருந்துகளை இடவேண்டும்.
சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணி காக்கவும், பொதுமக்களின் பொழுது போக்கிற்காகவும், 704 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 540 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பில் உள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் கோடை காலங்களில் 30 நாட்களுக்கு ஒரு முறையும், குளிர்காலம் மற்றும் மழை காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் புல்வெளிகளை வெட்டி பராமரிக்க வேண்டும். 7 நாட்களுக்கு ஒருமுறை அல்லது தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கு இடையேயான களைகளை அகற்ற வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியான அளவில் வெட்டி பராமரிக்க வேண்டும். செடிகளின் வளர்ச்சியை பொறுத்து தேவையான பொழுது வெட்டி பராமரிக்க வேண்டும்.

புல்வெளி அல்லது செடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் வறண்டு அல்லது வளர்ச்சியின்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக செடி, கொடிகளை உடனடியாக நட்டு பராமரிக்க வேண்டும். மழை மற்றும் குளிர்காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், கோடைகாலத்தில் நாள்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இயற்கை உரமும், தென்மேற்கு பருவமழை காலத்தின் போது இருமுறை, வடகிழக்கு பருவ மழையின் போது பூச்சிகொல்லி மருந்துகளை இடவேண்டும்.

ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தகுதியுடைய பணியாளர்கள் தேவையான எண்ணிக்கையில் பணியில் நாள்தோறும் இருக்க வேண்டும். பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு இருக்க வேண்டும். பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்களை காட்சி படுத்தி இருக்க வேண்டும்.

பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். பராமரிப்பு பணிகளில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

குடியிருப்பு நலசங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களை கண்காணித்து பூங்காக்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் குறித்து மண்டல அலுவலகம் அல்லது வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் அல்லது தலைமையிடத்தில் உள்ள 1913 என்ற தொலைபேசி உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.

பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களின் குறைபாடுகள் குறித்து தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News