செய்திகள்
கோப்புப்படம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்த பெண்- கீழே விழுந்ததால் காயம் என ஆஸ்பத்திரியில் நாடகம்

Published On 2021-07-27 04:21 GMT   |   Update On 2021-07-27 04:21 GMT
கோவையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங் (வயது 29). ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார்.

இவரது மனைவி சவுந்தர்யா (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சவுந்தர்யா கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கிறார்.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீலிக்கோணாம் பாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்களாகினர். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சவுந்தர்யாவின் கணவர் சேதுராஜாராம் சிங்குக்கு தெரியவந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். கள்ளக்காதலை கைவிடக்கோரி சவுந்தர்யாவை அவர் கண்டித்தார். ஆனால் சவுந்தர்யா கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு தொடர்பாக கடந்த 23-ந் தேதி கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சவுந்தர்யா புகார் செய்தார். போலீசார் சேதுராஜாராமை அழைத்து விசாரித்தனர். பின்னர் கணவன்-மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சேதுராஜாராமை கொன்று விட்டால் கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழலாம் என சவுந்தர்யா நினைத்தார். இதற்காக சரியான நேரம் பார்த்து சவுந்தர்யா காத்திருந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு சேதுராஜாராம் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சவுந்தர்யா, தனது கள்ளக்காதலன் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தார். குணசேகரன் தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் 3 பேரை அழைத்துக் கொண்டு சவுந்தர்யா வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சேதுராஜாராம் சிங்கின் கழுத்தை அவர்கள் அரிவாளால் அறுத்தனர். இதில் வேதனை தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். இதனால் பயந்து போன குணசேகரனும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அக்கம்பக்கத்தினர் விழித்து சவுந்தர்யா வீட்டுக்கு ஓடி வந்தனர். அங்கு சேதுராஜாராம் சிங், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவர்களிடம் தனது கணவர் கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் காயம் அடைந்து விட்டதாகவும் சவுந்தர்யா தெரிவித்தார்.

பின்னர் சேதுராஜாராம் சிங்கை சவுந்தர்யா கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்த டாக்டர்களிடமும் தனது கணவர் தவறி விழுந்து விட்டதாக தெரிவித்தார். டாக்டர்களும் சேதுராஜாராம்சிங்குக்கு சிகிச்சையை தொடங்கினர். அந்த சமயம் டாக்டர்களிடம் சேதுராஜாராம் சிங் தன்னை மனைவி சவுந்தர்யாவும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொல்ல முயன்றதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சவுந்தர்யாவை பிடித்து விசாரித்தனர். அப்போது கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொல்ல முயன்ற விவரத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சவுந்தர்யா, அவரது கள்ளக்காதலன் குணசேகரன் மற்றும் நண்பர்களான 4 சிறுவர்கள் என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சவுந்தர்யா, குணசேகரன் ஆகியோரை ஜெயிலிலும் மற்ற 4 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News