செய்திகள்
டிடிவி தினகரன்

மேகதாது அணை பிரச்சனை: டி.டி.வி.தினகரன் தலைமையில் தஞ்சாவூரில் அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2021-07-26 04:31 GMT   |   Update On 2021-07-26 04:31 GMT
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வருகிற ஆகஸ்டு 6-ந் தேதி தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதி நீரில் நமக்குரிய பங்கினைத் தராமல் பல்வேறு காலக்கட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. அதிலும் தி.மு.க எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் புதிய அணைகள் கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் கர்நாடகா, இப்போதும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது.

இதனைக் கண்டித்தும், மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காவிரி பிரச்சனையில் உறுதியாக நின்று சட்டப்படியான தீர்ப்புகளை நமக்குப் பெற்று தந்த அம்மாவின் வழியில் செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வருகிற ஆகஸ்டு 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்கிறார்.

தமிழ்நாட்டின் உரிமையைக் காத்திட நடைபெறும் இப்போராட்டத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாக கடைபிடித்து மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News