செய்திகள்
கோப்புபடம்

தாய்மார்களுக்கு பீதிவேண்டாம் - தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாது

Published On 2021-06-20 09:42 GMT   |   Update On 2021-06-20 09:42 GMT
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூகான் மற்றும் அமெரிக்காவிலும் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அந்த வகையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் குழந்தைகளுக்கும் தொற்று ஏற்படுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை என்று உலக அளவில் பல்வேறு தரப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் புதுவை ஜிப்மர் பேராசிரியர் டாக்டர் ஆதிசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் இதுபற்றி விரிவான ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிகள் பிரசவித்த 48 முதல் 72 மணி நேர இடைவெளியில் அவர்களின் தாய்ப்பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர்களுக்கு தொற்று இருந்தது உறுதியானது.

அதை தொடர்ந்து மிகவும் பாதுகாப்பான முறையில் முககவசம் அணிந்தும், கிருமி நாசினியால் கைளை சுத்தப்படுத்திக்கொண்டும், அந்த பகுதியையே தொற்று ஏற்படாதபடி பராமரித்தும் குழந்தைகளுக்கு பாலூட்ட செய்தனர்.

பின்னர் ஒன்றிரண்டு நாட்களுக்கு பிறகும், 5 நாட்களுக்கு பிறகும் அந்த குழந்தைகளின் சளிமாதிரிகளை எடுத்து பரிசோதித்தனர். அப்போது அனைத்து குழந்தைகளுக்கும் தொற்று ஏற்படவில்லை. என்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே கொரோனா தொற்று ஏற்பட்ட தாய்மார்கள் பாலூட்டுவதால் அதன் மூலம் தொற்று பரவ வாய்ப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூகான் மற்றும் அமெரிக்காவிலும் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாறாக தொற்று பாதித்த பெண்கள் பாலூட்டுவதால் குழந்தைகளின் உடலில் ஆன்டிபாடி என்ற நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News