செய்திகள்
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது

Published On 2021-06-15 07:35 GMT   |   Update On 2021-06-15 07:35 GMT
மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் இங்கு தேக்கி வைக்கப்படாமல் முழுமையாக திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை சென்றடையும்.
திருச்சி:

காவிரி டெல்டா சாகுப டிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து விட்டார்.

முன்னதாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் ரூ.65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்த படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டம் கடந்து நாமக்கல், ஈரோடு, ஜேடர்பாளையம், நொய்யல், கரூர், டி.என்.பி.எல். வழியாக நேற்று அதிகாலை கரூர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அப்போது வந்த 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி வந்தது. இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரத்து 638 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அங்குள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

மாயனூரை கடந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது. இன்று காலை 8 மணியளவில் பெட்டவாய்த்தலைக்கு வந்தது. தொடர்ந்து அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்கொம்புக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது.

அதன்பிறகு முக்கொம்பில் இருந்து இன்று காலை 8 மணியளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டனர். முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூக்களை தூவினர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. முக்கொம்புக்கு தற்போது 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. கல்லணையை இரவு 7 அல்லது 8 மணிக்குள் சென்றடையும். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காக திறந்து வைக்கிறார்கள் என்றார்.

மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் இங்கு தேக்கி வைக்கப்படாமல் முழுமையாக திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை சென்றடையும். இதையடுத்து நாளை கல்லணை திறக்கப்படுகிறது. கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 96 அடியாக உள்ளது. தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முக்கொம்புவில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையை சென்றடைந்ததும் அங்கிருந்து நாளை டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதையொட்டி கொள்ளிடம் ஆற்றின் உள்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதேபோல் கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைக்கின்றனர்.

கல்லணை திறப்பையொட்டி தண்ணீர் பாயும் கல்லணை கால்வாய், வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆற்று பாலங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
Tags:    

Similar News