செய்திகள்
சுபாஷினி

நாசா விண்வெளி மையத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை வழிநடத்தும் கோவை பெண்

Published On 2021-06-08 10:25 GMT   |   Update On 2021-06-08 10:25 GMT
நாசா விண்வெளி மையம் 2024-ம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒரையன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.
கோவை:

நிலவை பற்றிய ஆய்வுகளில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டு வந்தாலும் ஆய்வில் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையமே முன்னணியில் உள்ளது.

இந்த விண்வெளி மையத்தின் பல்வேறு முக்கிய திட்டங்களில் இந்தியாவை சேர்ந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், சுவாதி மோகன் ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளார்கள்.

இவர்களது வரிசையில், தற்போது நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த சுபாஷினி அய்யர் என்பவர் முக்கிய பங்காற்றி வருகிறார்.



நாசா விண்வெளி மையம் 2024-ம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒரையன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.

இந்த திட்டத்துக்கு ஆர்ட்டெமிஸ் என்று நாசா பெயரிட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் வரும் நவம்பர் மாதம் ஒரையன் விண்கலம் ஆளில்லாமல் செலுத்தப்பட்டு, பூமிக்கு திரும்ப உள்ளது. இதன் பிறகு ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் வரும் 2023 அல்லது 2024ம் ஆண்டில் ஓரையன் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் முதுகெலும்பாக கருதப்படும் ராக்கெட்டை தயாரிக்கும் திட்ட பணிகளில் தான் சுபாஷினி அய்யர் ஈடுபட்டு வருகிறார்.

இவரது சொந்த ஊர் கோவை. இவரது தந்தை பேன், பெல்ட், ரப்பர், ஆட்டோ மொபைல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தினார்.

இதுவே சுபாஷினி அய்யருக்கு மெக்கானிக்கல் மீது ஆர்வம் ஏற்பட காரணம். சகோதர, சகோதரிகள் கணினி மற்றும் மருத்துவ துறையை தேர்ந்தெடுத்தபோது இவர் மட்டும் மெக்கானிக்கல் துறையை தேர்ந்தெடுத்தார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 1992-ம் ஆண்டி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். அவர் படித்த கால கட்டத்தில் மெக்கானிக்கல் பிரிவில் இவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுபாஷினி அய்யர் கூறியதாவது:-

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அழைத்து சென்று 50 வருடம் ஆகிறது. அதனால், 2-வது முறையாக விண்வெளி வீரர்களை அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளில் நாசா ஈடுபட்டுள்ளது. நிலவை தாண்டி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் இந்த திட்டம் முன்னோடியாக இருக்கும். அதற்காக ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் ஓரையன் விண்கலம் 4.5 லட்சம் கி.மீ தொலைவுக்கு அப்பால் ஆளில்லாமல் செலுத்தப்பட உள்ளது. இது 3 வார பயண திட்டமாகும். எஸ்.எல்.எஸ் என்ற உலகி அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டில் ஓரையன் நிலவுக்கு செலுத்தப்பட உள்ளது.

நாசா மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து இந்த ராக்கெட்டை தயாரிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக போயிங் நிறுவன குழுவின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். 500 வினாடிகளில் 5.3 லட்சம் அடி பாயும் வகையில் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாசா தொடங்கி உள்ள இந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால், அதில் சுபாஷினியின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.



Tags:    

Similar News