நடமாடும் வாகனங்கள் மூலம் ரேசன் பொருட்களை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் போன்றவை அவரவர் இல்லங்கள் அருகேயே 10 பொருள்கள் அடங்கிய காய்கறி தொகுப்பாக விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த ஊடரங்கு நடவடிக்கையால் தற்பொழுது தொற்று எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதாக செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் அனைத்து ரேசன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை திறந்து இருக்கும். அந்த சமயத்தில் ரேசன் பொருட்களையும், நிவாரணத் தொகை ரூ.2,000 வாங்காதவர்கள் வாங்கிகொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தளர்வில்லாத ஊரடங்கை அறிவித்துவிட்டு மறுபுறம் நியாயவிலை கடையில் பொருள்கள் பெறுவதற்காக தளர்வுகளை அறிவிப்பது, கொரோனா பரவலை மேலும் அதிகரிக்குமே தவிர, எந்தவிதமான கட்டுக்குள்ளும் வராது.
ஆகவே தமிழக அரசு நடமாடும் வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நேரடியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான பொருள்களை தொகுப்பாக வழங்க வேண்டும். அதோடு நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு பகுதிக்கும் எந்தந்த தேதிகளில் எத்தனை மணிக்கு வருவார்கள் என்று முன்னறிவிப்பாக கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பினால் பயனுள்ளதாக இருக்கும். இதனால் நோய் தொற்றும் ஏற்படாது, ஏழை, எளிய, மக்களுக்கும் தேவையான இன்றியமையாத பொருட்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே கிடைக்கும். தமிழக அரசு இதை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.