செய்திகள்
குட்டையில் மூழ்கி பலியான அக்காள், தங்கை

தர்மபுரி அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

Published On 2021-05-15 03:48 GMT   |   Update On 2021-05-15 03:48 GMT
தர்மபுரி அருகே பண்ணைக்குட்டையில் மூழ்கி அக்காள், தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருடைய மனைவி இளையராணி. இவர்களுக்கு சாதிகா (வயது 5) மற்றும் தனுஸ்ரீ (3) ஆகிய 2 மகள்களும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

இந்தநிலையில் கொட்லு மாரம்பட்டியில் உள்ள சிறுமிகளின் பாட்டி சத்தியவாணி என்பவர் தனது வீட்டுக்கு 2 சிறுமிகளையும் சில நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றார். இதற்கிடையே நேற்று சத்தியவாணி சிறுமிகள் மற்றும் சந்துரு (5) ஆகியோரை அழைத்து கொண்டு தன்னுடைய மல்லிகை தோட்டத்திற்கு சென்றார்.

பின்னர் மூதாட்டி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இதற்கிடையே அங்கு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்ட பண்ணைக் குட்டையில் 4 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது சிறுமிகள் சாதிகா, தனுஸ்ரீ மற்றும் சிறுவன் சந்துரு (5) ஆகியோர் பண்ணைக்குட்டையில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் இருந்த தண்ணீரில் சிறுமிகள் இருவரும் மூழ்கி விட்டனர். சிறுவன் சந்துரு குட்டையில் இருந்து மேலே ஏறி வந்து விட்டான்.

இதையடுத்து சிறுவனின் அழுகையை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்ப்பதற்குள் சிறுமிகள் சாதிகா மற்றும் தனுஸ்ரீ இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து சிறுமிகளின் உடல்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பலியான சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ணைக்குட்டையில் மூழ்கி அக்காள், தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News