செய்திகள்
கோவில்பட்டியில் அடைக்கப்பட்டுள்ள நகைப்பட்டறைகள்.

கொரோனா ஊரடங்கு- நகைப்பட்டறை தொழில் கடும் பாதிப்பு

Published On 2021-05-14 07:03 GMT   |   Update On 2021-05-14 07:03 GMT
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல் செய்யப்பட்டதால் நகை மற்றும் பட்டறை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நகை செய்யும் தொழில் சார்ந்த கம்பி பட்டறை, டை பட்டறை, பால்ஸ் பட்டறை, மெருகு பட்டறை, மிஷின், கட்டிங் பட்டறை, ஸ்கேன் கட்டிங் பட்டறை, ஹால்மார்க் கடை என பல்வேறு வகையான பட்டறைகள் என சுமார் 600-க்கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல் செய்யப்பட்டதால் நகை மற்றும் பட்டறை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மங்கல விழாக்கள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டதால் நகை தொழில் சார்ந்த மற்றும் இதர நுணுக்கமான வேலைகளில் கை தேர்ந்த கை வினைஞர்கள் மிகவும் பரிதாபமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களை நம்பியுள்ள குடும்பம் வேலையில்லாமல் தவிக்கின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கினால் தொழில் முற்றிலுமாக முடங்கி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வட்டிக்கு பணம் வாங்கி தங்களது குடும்பத்தினை நடத்தி வந்தனர்.

இந்த ஆண்டு தொழில் இருக்கும் இழந்த பணத்தை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அட்சய திரிதியை முன்னிட்டு நிறைய ஆர்டர்கள் வரும். அதன் மூலமாக கடந்தாண்டு வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்று தொழிலாளர்கள் நினைத்திருந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் எவ்வித ஆர்டர்கள் இல்லாமல் நகைத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு நகைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் கருதி உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நகைத் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நகைத் தொழிலாளர்கள் விரைவில் தொழில் செய்வதற்கு உரிய மானியத்துடன் கூடிய கடனை உடனே வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags:    

Similar News