செய்திகள்
ஆக்சிஜன் படுக்கை

ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் 10 நோயாளிகள் பலியா?- உறவினர்கள் புகார்

Published On 2021-05-13 07:19 GMT   |   Update On 2021-05-13 07:19 GMT
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மட்டும் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கை உடனடியாக கிடைக்காததால் 10 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது.
நெல்லை:

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போது நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இவர்களுக்கு படுக்கை ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நெல்லை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களில், உடல்நிலை மோசமானவர்களையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

இப்படி வருபவர்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் ஆக்சிஜன் படுக்கை உடனடியாக கிடைக்காததால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மட்டும் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கை உடனடியாக கிடைக்காததால் 10 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தினசரி 15 முதல் 20 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் பலியாகி வருகிறார்கள். இதில் கொரோனா தொற்று மற்றும் இணை நோய் காரணமாக 5 முதல் 7 பேர் வரை பலியாகிறார்கள்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் நோயாளி உடல் நிலையை பொறுத்து அவருக்கு ஆக்சிஜன் இணைப்பு படுக்கை வழங்கப்படும். நோயாளிகளை உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வருவதை விட்டு விட்டு முன் கூட்டியே அழைத்து வந்தால் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும்.

எனவே ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் தான் நோயாளிகள் இறந்தார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News