செய்திகள்
தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கொலுசுகளை படத்தில் காணலாம்.

இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.20 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கொலுசுகள் பறிமுதல்

Published On 2021-05-12 02:32 GMT   |   Update On 2021-05-12 02:32 GMT
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சென்ற படகில், 11 பாக்கெட்டுகளில் 21 கிலோ எடை கொண்ட வெள்ளிக்கொலுசுகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வெள்ளிக்கொலுசு மற்றும் படகை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து விரலி மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, வெங்காய விதைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடற்கரையில் கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு போலீசார் மற்றும் அனைத்து உளவுப்பிரிவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஆனாலும், தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தியவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை கொரோனா அச்சம் காரணமாக திருப்பி அனுப்பினர்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து ஒரு படகில் 4 பேர் இலங்கைக்கு வெங்காய விதை மூட்டைகளுக்குள் மறைத்து வெள்ளிக்கொலுசுகளை கடத்தி சென்றனர். அவர்கள் தனுஷ்கோடியை கடந்து இலங்கை எல்லை பகுதியை சென்றடைந்தனர். அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் பொருட்களை வாங்க வராமல் காலதாமதம் செய்து உள்ளனர். இதனால் ஒரு நாள் முழுவதும் அவர்கள் அங்கு காத்திருந்ததாக தெரிகிறது.

அந்த சமயத்தில் இலங்கை கடற்படையினர் அங்கு ரோந்து வந்தனர். இதனால் வெள்ளிக்கொலுசுகள் இருப்பது தெரிந்த 2 பேர் படகில் இருந்து கடலில் குதித்து அருகில் இருந்த மற்றொரு படகுக்கு சென்று தப்பி விட்டனர். மேலும் படகில் இருந்த மற்ற 2 பேர், படகில் வைத்து இருந்த வெங்காய விதை மூட்டைகளை வெட்டி கடலில் வீசினார்கள். அப்போது ஒரு மூட்டையில் 11 பாக்கெட்டுகள் இருந்தது. அவை வித்தியாசமாக இருந்ததால், அந்த பாக்கெட்டுகளை தனியாக படகுக்குள் மறைத்து வைத்தனர்.

இலங்கை கடற்படை வந்தபோது, வெங்காய விதைகளை கடலில் வீசி விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனால் அவர்களை எச்சரித்து கடற்படையினர் அனுப்பி வைத்தனர். இதையடுத்து 11 பாக்கெட்டுகளுடன் 2 பேரும் தூத்துக்குடி திரேஸ்புரத்துக்கு திரும்பி வந்தனர்.

இதுகுறித்து கியூபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணிதர்மராஜ், வில்லியம் பெஞ்சமின், வேலாயுதம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திரேஸ்புரத்திற்கு சென்றனர். அங்கு இலங்கை சென்று வந்த படகில் சோதனை நடத்தினர்.



அந்த படகில், 11 பாக்கெட்டுகளில் 21 கிலோ எடை கொண்ட வெள்ளிக்கொலுசுகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வெள்ளிக்கொலுசு மற்றும் படகை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக்கொலுசுகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தூத்துக்குடி இனிகோநகரை சேர்ந்த பட்டுராஜ் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட பட்டுராஜை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாரிமுத்து, விஜி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News