செய்திகள்
கைதான ஏட்டு பொன் மாரியப்பன்

தூத்துக்குடி வியாபாரி கொலையில் போலீஸ் ஏட்டு கைது

Published On 2021-05-11 08:30 GMT   |   Update On 2021-05-11 08:30 GMT
தூத்துக்குடி வியாபாரி கொலையில் கைதான ஏட்டு பொன்மாரியப்பன் மற்றும் ரவுடி மோகன்ராஜ் ஆகியோரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன் (வயது 47). இவர் சிப்காட் வளாகத்தில் டீக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர்கள் இவரை தேடிச் சென்றனர். அப்போது மீளவிட்டான் ரெயில் நிலையம் அருகே கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராஜூக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று ரவுடி மோகன்ராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த பொன் மாரியப்பன் (37), என்பவரை இன்று கைது செய்தனர். இவர் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கிடைத்த தகவல்கள் விபரம் வருமாறு:-

கடந்த 1998-ம் ஆண்டு போலீஸ் ஏட்டு பொன் மாரியப்பன் சிறுவனாக இருந்தபோது அவரது தாய்மாமா அழகு என்பவரை டீக்டை வியாபாரி லூர்துஜெயசீலன் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு பழிக்குபழி வாங்க 21 ஆண்டுகள் கழித்து பொன்மாரியப்பன், மோகன்ராஜ் துணையுடன் கொலை செய்தது தெரியவந்தது.

கைதான ஏட்டு பொன்மாரியப்பன் மற்றும் ரவுடி மோகன்ராஜ் ஆகியோரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

Tags:    

Similar News