செய்திகள்
உடையார்சாமி

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2021-05-09 17:18 GMT   |   Update On 2021-05-09 17:18 GMT
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உடையார்சாமி (வயது 30). இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்கு இருந்து சொந்த ஊருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

இந்த நிலையில் உடையார்சாமி வீட்டின் அருகே துவைத்த துணிகளை காய வைக்க சென்றார். அங்கு உள்ள ஒரு ஒயரில் கயிறு கட்டப்பட்டு இருந்தது. அதில் துணிகளை காயப்போட்டுக் கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் மழை பெய்ததால் உடையார்சாமி மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடையார்சாமி உடலை மீட்டு பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News