செய்திகள்
உடுமலை வனப்பகுதியில் காட்டு யானைகளை அடித்து துன்புறுத்திய வாலிபர்கள்
உடுமலை வனப்பகுதியில் காட்டு யானைகளை கற்களால் தாக்கிய மலைவாழ் வாலிபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் பல மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அங்கு வசித்து வரும் மலைவாழ் வாலிபர்கள் சிலர் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு தண்ணீர் தேடிவரும் காட்டு யானைகளை குச்சிகளை கொண்டு அடித்தும், கல்வீசி தாக்கியும் துன்புறுத்தி உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை பார்த்து விலங்கு நல ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். வாலிபர்களின் தாக்குதலில் யானைகள் காயமடைந்து உள்ளனவா என வனத்துறையினர் ரோந்து சென்று கண்டறிய வேண்டும் என்றும், அவ்வாறு இருந்தால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், யானைகளை துன்புறுத்திய திருமூர்த்திமலை மலைவாழ் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 32), காளிமுத்து (25), அருண்குமார் (30) ஆகிய 3 பேர் மீது உடுமலை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான அந்த 3 பேரையும் உடுமலை வனத்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.