செய்திகள்
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோபால்பட்டி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக தற்போது அரசியல் கட்சியினரும், அவர்களின் குடும்பத்தினரும் வைரஸ் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதனுக்கு (வயது 72) கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது.
இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் அவருடைய மனைவி செல்வராணிக்கும் (63) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து 2 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.