செய்திகள்
கேஎஸ் அழகிரி

மக்களை காக்கும் பணியில் மோடி தீவிரமாக செயல்பட வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2021-04-15 09:03 GMT   |   Update On 2021-04-15 09:03 GMT
பிரதமர் மோடி எதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் இந்திய மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மராட்டியம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அதேபோல, கொரோனாவினால் ஏற்படுகிற உயிர்பலி நேற்று 1027 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதிக்கு பிறகு கொரோனாவுக்கு ஒரே நாளில் இதுதான் அதிகபட்ச உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, தமிழகத்தில் ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

கடந்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி பொது முடக்கம் செய்யப்பட்ட மறுநாள் பிரதமர் மோடி பேசும் போது, ‘பாரதப் போருக்கு 14 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், கொரோனா எதிர்ப்பு போருக்கு 21 நாட்கள் கூட தேவைப்படாது’ என்று பேசியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியாவில் இதுவரை 1 கோடியே 38 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 72 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடியின் கொரோனா எதிர்ப்பு போரினால் கிடைத்த பலன்களா? பிரதமர் மோடி எதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் இந்திய மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இந்தியாவின் பிரதமராக மோடி செயல்பட வேண்டுமே தவிர, பா.ஜ.க.வின் பிரதமராக அவர் செயல்படக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News