ரெயில் நிலையத்தில் எலும்புக் கூடாக மீட்கப்பட்டது ஆணின் உடல் - பெண் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் திருப்பம்
சென்னை:
சென்னை அடையாறு கிரீன்வே சாலை பறக்கும் ரெயில் நிலையத்தில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கஞ்சா கும்பல் ஒன்று கோட்டூர்புரம் போலீசாரிடம் தகவல் தெரிவித்தது.
இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் பறக்கும் ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள குடோனில்தான் பெண்ணின் உடல் வீசப்பட்டதாக கஞ்சா கும்பல் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது எலும்புக்கூடு ஒன்று சிக்கியது. அது இளம்பெண்ணின் எலும்புக்கூடாக இருப்பதாகவே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் பரபரப்பு திருப்பமாக கொலை செய்யப்பட்டது பெண் அல்ல என்றும் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது ஆணின் உடல் என்றும் போலீஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மீட்கப்பட்டது ஆணின் உடல் என்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்பதை அடையாளம் காணும்பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.