செய்திகள்
பல்லடம் அறிவொளி நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தொடர் போராட்டம்

Published On 2021-04-01 08:33 GMT   |   Update On 2021-04-01 10:53 GMT
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 -15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்லடத்தில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. மேலும் ஊராட்சி நிர்வாகம் குடியிருப்பு வீடுகளுக்கு அதிக அளவில் வரிவிதிப்பு செய்துள்ளதாக கூறி, கடந்த 2 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், காலிக்குடங்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் குடிநீர் வழங்கும் பொறுப்பை குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்து சரிபார்க்கப்படும் என்றும், தேர்தல் முடிந்தவுடன், வரிவிதிப்பு குறித்து பேசிக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்டதால் பொதுமக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் சொன்னதுபோல் குடிநீர் வரவில்லை என்று அந்தப்பகுதி மக்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர். நேற்று கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது. பொதுமக்கள் கூறுகையில் எங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர். இது போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News