வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து வழக்கு - ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
சென்னை:
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஏற்கனவே, நிலக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்தநிலையில், பசும்பொன் மக்கள் கழகத்தின் நிறுவனத்தலைவர் எஸ். இசக்கிமுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், “ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடுகளில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில், உள்ஒதுக்கீடு வழங்குவது விதிகளுக்கு முரணானது ஆகும். தேர்தலை மனதில் கொண்டே இப்படி ஒரு ஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் “ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளுடன், இந்த வழக்கும் ஏப்ரல் மாதம் விசாரிக்கப்படும்” என்று உத்தரவிட்டனர்.