பல்லடத்தில் தனியார் நூற்பாலையில் பெயிண்டர் படுகொலை
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னூர் பகுதியில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள் மேற் கொள்வதற்காக நூற்பாலையில் பெயிண்டிங் பணிக்கு விருதுநகரில் இருந்து தொழிலாளர்கள் சிலர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்குவதற்கு நூற்பாலை வளாகத்திற்கு உள்ளேயே குடியிருப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை வளாகத்திற்குள் உள்ள குடியிருப்பில் பெயிண்டிங் வேலைக்கு வந்த வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யபட்டு கிடந்தார்.
இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையை தொடர்ந்தனர்.
விசாரணையில் தலையில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் விருதுநகர் திருச்சுழியை சேர்ந்த மங்கலேஸ்வரன் (வயது 40) என்பது தெரியவந்தது.
பெயிண்டரான இவர் நூற்பாலை பணிக்காக இங்கு வந்து தங்கியுள்ளார். நண்பர்களுடன் இரவு குடியிருப்பில் இருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மங்கலேஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மங்கலேஸ்வரனை கொலை செய்தது யார்? இரவில் அவருடன் தங்கியிருந்தது யார்? யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.