செய்திகள்
கோப்பு படம்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு ஜெயில்

Published On 2021-02-26 02:10 GMT   |   Update On 2021-02-26 02:10 GMT
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சென்னை:

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும், திருவொற்றியூர் கிழக்கு குளக்கரைத்தெருவைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 23) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததில் இருந்து மணிகண்டன் மற்றும் அவரது தாயார் சத்யவதி ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கஸ்தூரியை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர் கர்ப்பமாக இருந்தபோதும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் திருமணமான சில மாதங்களில் கஸ்தூரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மணிகண்டன், சத்யவதி ஆகியோர் மீது தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் எல்.ஸ்ரீலேகா ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டன், சத்யவதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவர்கள் இருவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Tags:    

Similar News