செய்திகள்
தற்கொலை

சேலம் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதானவர் திடீர் தற்கொலை

Published On 2021-02-23 10:08 GMT   |   Update On 2021-02-23 10:08 GMT
சேலம் மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதானவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள செண்பகாதேவி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 30). திருமணமான இவர் சேலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவியில் தாயார் அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 9 மாதமாக சிறையில் இருந்து வரும் அசோக்குமார் பல முறை ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அசோக்குமார் அவர் அணிந்திருந்த லுங்கியில் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்ட அறையிலேயே இன்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த சிறை ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News