செய்திகள்
பா.ஜனதா- அதிமுக கூட்டணி உறுதி- இல.கணேசன் பேட்டி
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி உறுதி. இதனை உணர்த்துவதற்காகத்தான் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரின் கைகளை பிரதமர் உயர்த்தி காண்பித்தார் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.
திருப்பூர்:
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி உறுதி. இதனை உணர்த்துவதற்காகத்தான் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரின் கைகளை பிரதமர் உயர்த்தி காண்பித்தார். சசிகலாவை தமிழக மக்கள் வரவேற்கவில்லை. அ.ம.மு.க. கட்சியினர் மட்டுமே வரவேற்று உள்ளனர். அ.தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகள் பிரச்சினைகள் குறித்து வேறு கட்சிகள் கருத்து தெரிவிக்க இடமில்லை. நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து அவரது இயலாமையை வெளிப்படையாக தெரிவித்தார். இதற்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
இந்தியாவின் தென்பகுதியில்(புதுச்சேரி) இருந்த ஒரே ஒரு காங்கிரஸ் ஆட்சியும் கவிழக்கூடிய சூழலில் உள்ளது. ராகுல்காந்தி வந்து சென்ற ராசியாக கூட இருக்கலாம். புதுச்சேரி சட்டமன்றத்தில், காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
பெரும்பான்மை நிருபிக்கப்பட்டால் நாராயணசாமி முதல்-அமைச்சராக நீடிப்பார். இதற்கும் பா.ஜனதாவுக்கும், துணை நிலை கவர்னருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.