செய்திகள்
கைதான பாட்டி

மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் தலையணையால் அமுக்கி கொன்றேன் - உசிலம்பட்டியில் கைதான பாட்டி வாக்குமூலம்

Published On 2021-02-20 10:01 GMT   |   Update On 2021-02-20 10:01 GMT
திருமங்கலம் அருகே பெண் குழந்தை பிறந்ததால் தலையணையால் அமுக்கி கொன்றதாக கைதான பாட்டி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி, விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவ பிரியங்கா (வயது 28).

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சிவபிரியங்காவுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்தது.

இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமான சிவ பிரியங்காவுக்கு கடந்த வாரம் 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.

சம்பவத்தன்று அந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் பச்சிளங் குழந்தையின் முகத்தில் ஆழமான கீறல்கள், காயங்கள் இருந்தன. இதனால் டாக்டர்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர்கள் உத்தப்பநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் குழந்தையின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

பிறந்து 7 நாளே ஆன நிலையில் இந்த குழந்தை கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீசார் குழந்தையின் பெற்றோர் சின்னசாமி-சிவபிரியங்காவிடன் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் நடந்த அன்று காலை குழந்தையை, சின்னசாமியின் தாய் நாகம்மாளிடம் கொடுத்து விட்டு வயல் வேலைக்கு சென்று விட்டதாக கூறினர்.

போலீசார் நாகம்மாளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் பச்சிளங் பெண் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

விவசாய கூலி தொழிலாளியான சின்னசாமிக்கு சில ஆண்டுகளாக சரிவர வேலை இல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியது. ஏற்கனவே பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கும் உடல் ரீதியாக பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் 2 குழந்தைகளை வளர்ப்பதில் சின்னசாமிக்கு சிரமம் ஏற்பட்டது. 3-வது பிறந்த ஆண் குழந்தையும் சில மாதங்களிலேயே இறந்ததால் அவர் சோகமடைந்தார்.

இதற்கிடையில் சிவபிரியங்கா மீண்டும் கர்ப்பமடைய, சின்னசாமி குடும்பத்தினர் ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் சின்னசாமி, அவரது தாயார் நாகம்மாள் ஆகியோர் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை வளர்க்க குடும்ப சூழ்நிலை இல்லை என சின்னசாமி கூறி வந்தார்.

மேலும் ஏதேனும் காப்பகத்திற்கு அளித்து விடலாம் என குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் இதில் நாகம்மாளுக்கு விருப்பம் இல்லை. இதனால் அவர் தனது பேத்தியை கொல்ல முடிவு செய்தார்.

கள்ளிப்பால், உமி கொடுத்தால் பிரேத பரிசோதனையில் தெரிந்து விடும் என கருதிய அவர் இரக்கமற்ற நிலையில் தலையணையால் மூச்சை நிறுத்தி பச்சிளங்குழந்தையை கொலை செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்தது. இது தொடர்பாக நாகம்மாள் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், எனது மகனுக்கு 3-வதாக ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றம் அடைந்தேன்.

ஏற்கனவே வறுமையில் வாடியதால் குழந்தையை தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். இது வெளியில் தெரியாது என நினைத்தேன். ஆனால் டாக்டர்கள் இதை கண்டுபிடித்து விட்டனர் என்று கூறினார்.

கைதான நாகம்மாள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது போல் தானும் ஒரு பெண் என்பதை மறந்து நாகம்மாள் தனது பேத்தியை கொலை செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News