செய்திகள்
பொள்ளாச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின்

மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து செய்யப்படும்- மு.க.ஸ்டாலின்

Published On 2021-02-20 07:04 GMT   |   Update On 2021-02-20 09:18 GMT
திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
பொள்ளாச்சி:

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று 2-வது நாளாக பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

கடந்த 25-ந் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசாரத்தை அறிவித்து 29-ந் தேதி திருவண்ணாமலையில் முதல் கூட்டத்தை நடத்தினேன். இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம். அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை மனுக்களாக வாங்கி அதனை தீர்த்து கொடுக்க வேண்டும் என்பது தான்.

இதுவரை 133 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற்றுள்ளேன். 234 தொகுதிகளுக்கு செல்ல நான் முடிவு செய்துள்ளேன். இந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டத்தை அதிகளவில் ஆளும் கட்சியினர் பார்த்து வருகிறார்கள். அவர்கள் பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. அப்படியாவது அவர்களுக்கு புத்தி வரட்டும். சுய புத்திதான் இல்லை. நான் சொல்வதையாவது கேட்கட்டும்.

நீங்கள் பெட்டியில் போட்டுள்ள மனுக்களுக்கு ரசீதாக ஒரு அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டையை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். இன்னும் 3 மாதத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்து விடுவோம். வந்த மறுநாளே இந்த பெட்டிகள் திறக்கப்பட்டு உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். 100 நாளில் எல்லா மனுக்களையும் தீர்க்க முடியுமா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் தீர்த்து கொடுப்போம். அப்படி ஏதாவது மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிந்தால் இந்த அட்டையை எடுத்து கொண்டு நீங்கள் கோட்டைக்கு வரலாம். கோட்டைக்கு ஏன் முதல்-அமைச்சர் அறைக்கே வந்து கேட்கலாம். அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் உண்மையான விவசாயிகளுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. கலைஞர் பணியாற்றியது போன்று நான் பணியாற்றுவேன். அதனால் உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீர்ந்து விடும். பழங்குடியின மக்களுக்கு பல நலத்திட்டங்களை உருவாக்கி கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என அழைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவரின் மகன் என்பதால் நான் பெருமை கொள்கிறேன். வருகிற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என கூறி வந்தேன். தற்போது நான் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது, அங்கு வரும் கூட்டத்தை எல்லாம் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே நான் சொன்னேன். தமிழகத்தில் நடக்கும் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று. அது தற்போது நிரூபணமாகியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கும், அ.தி.மு.க.வினருக்கும் தொடர்பு கிடையாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் அந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததாக கூறினார். ஆனால் மேலும் 3 அ.தி.மு.க. நிர்வாகிகளை சி.பி.ஐ கைது செய்துள்ளது. பொள்ளாச்சி சம்பவத்துக்கும், அ.தி.முக.வுக்கும் தொடர்பு இருப்பதை சி.பி.ஐ. நிரூபித்துள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மாறாக இதில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள்.

தற்போது கூட ஒரு காரை சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளது. அந்த கார் அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரின் கார். இதை சொல்வதில் எனக்கு எந்தவித பயமோ, அச்சமோ இல்லை. துணிவிருந்திருந்தால் நீங்கள் வழக்கு போட்டு பாருங்கள். அதனை சந்திக்கவும் நான் தயாராக உள்ளேன். இந்த வழக்கில் உள்ள நபர்கள் அனைவர் மீதும் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை. இன்னும் சில மாதத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டோம். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் இந்த ஸ்டாலினிடம் இருந்து தப்பவே முடியாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேட்டு போய் உள்ளது. தி.மு.க ஆட்சி அமைத்ததும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு அது சீரமைக்கப்படும். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டுறவு சங்கங்களில் ஏழை விவசாயிகள் வாங்கிய 5 பவுன் வரையிலான நகைகடனை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தோம். அந்தவகையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுவினர் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போடப்பட்டிருந்த மனுக்களை எடுத்து, ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் அந்த குறைகள் அனைத்தும் தாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றபடும் எனவும் உறுதியளித்தார். இதையடுத்து புகார் பெட்டி சீல் வைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.

மு.க.ஸ்டாலின் அங்கு கூடியிருந்த முதியவர்கள், பெண்கள், ஆண்களுடன் கைகுலுக்கினார். சிலர் ஆர்வத்துடன் அவருடன் செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

இதுதவிர மக்கள் செல்பி எடுக்க ஸ்டாலின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அதில் நின்று ஏராளமான பெண்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த பிரசார கூட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர் பகுதிகளை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News