செய்திகள்
வைகோ

தமிழ் தேச மக்கள் முன்னணியினர் மீது போடப்பட்ட தடுப்பு சட்ட வழக்குகளை அரசு கைவிட வேண்டும்- வைகோ

Published On 2021-02-11 06:30 GMT   |   Update On 2021-02-11 06:30 GMT
தமிழ் தேச மக்கள் முன்னணியினர் மீது போடப்பட்ட தடுப்பு சட்ட வழக்குகளை அரசு கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாரதிய ஜனதா அரசு, மக்களுக்காகப் போராடுகின்றவர்களையும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்கொண்டவர்களையும் கைது செய்யும் போக்கு அண்மைக்காலத்தில் வளர்ந்து வருகின்றது.

2014 முதல் 2018 வரை ஊபா சட்டத்தின் கீழ், (சட்ட விரோத செயல் தடுப்பு சட்டம்) இந்தியாவில் 4878 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்று, தேசிய குற்ற இயல் ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரம் சுட்டிக் காட்டுகின்றது.

பீமா கொரேகான் வழக்கில், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியச் செயலாளர்களுள் ஒருவரான சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 16 பேர் ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், 2019 இல் மட்டும் ஊபா சட்டத்தின் கீழ் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூருக்கு அடுத்து, இது அகில இந்திய அளவில் இரண்டாவது அதிக இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் ஆகியோர் 06.02.2021 அன்று ஊபா சட்டத்தின் கீழ், சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2019 நவம்பர் 15 அன்று ஓர் இறப்பு அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றதற்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை தெரிவிக்கின்றது.

இவர்களைத் தவிர, ‘சிறைவாசிகள் விடுதலைக் குழு’ பொறுப்பாளர் விவேக் எனும் விவேகானந்தன் மீது, இதே அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதற்காக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர் ஏற்கனவே, கடந்த டிசம்பரில் ஊபாவில் கைது செய்யப்பட்டு, மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நடவடிக்கைகள், அந்தச் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குகின்றது.

இறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடந்து ஓராண்டிற்குப் பிறகு, தற்பொழுது மூன்று செயற்பாட்டாளர்களைத் திடீரெனக் கைது செய்து இருப்பது எதிர்க்கட்சியினரை மிரட்டும் நடவடிக்கை ஆகும்.

எனவே, அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட்டு, பாலன், கோ.சீனிவாசன், செல்வராஜ் மற்றும் விவேக் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா மற்றும் வழக்குகளை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
Tags:    

Similar News