செய்திகள்
சென்னை ஐகோர்ட்

அ.ம.மு.க. கொடியை அகற்றக்கோரி வழக்கு- ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை

Published On 2021-02-05 09:17 GMT   |   Update On 2021-02-05 09:17 GMT
எம்.ஜி.ஆர். வீட்டின் முன்பு சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள அ.ம.மு.க. கொடியை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை திங்கட்கிழமை ஐகோர்ட் விசாரிக்கிறது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்கள் கீதா மோகன், ராதா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டிற்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் லக்கி முருகன் என்பவர் கடந்த ஜனவரி 27-ந்தேதி சட்டவிரோதமாக அவரது கட்சி கொடி கம்பத்தை அமைத்தார்.

வீட்டின் முன்பு அமைந்துள்ள நடைபாதையை வழி மறிக்கும் இந்த கொடி கம்பத்தை அகற்றக்கோரி தமிழக அரசிடம் புகார் செய்தோம். இதனடிப்படையில் அதிகாரிகள் விரைந்து வந்து ஜனவரி 29-ந்தேதி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதன் பின்னர் கடந்த 1-ந்தேதி லக்கி முருகன் மீண்டும் அதே இடத்தில் பொது பாதையை ஆக்கிரமித்து, எங்கள் வீட்டிற்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை அமைத்துள்ளார்.

இந்த சட்டவிரோத கொடி கம்பத்தை அகற்ற தாமஸ் மவுண்ட் துணை கமி‌ஷனர், நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர், நெடுஞ்சாலை துறை மண்டல என்ஜினியர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

எங்கள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் இளங்கோவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினர்.
Tags:    

Similar News