செய்திகள்
மேட்டூர் அணை

நடப்பாண்டில் 23 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக மேட்டூர் அணைக்கு வந்துள்ளது

Published On 2021-01-29 08:24 GMT   |   Update On 2021-01-29 08:24 GMT
கர்நாடகாவில் இருந்து நடப்பாண்டில் 23 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக மேட்டூர் அணைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம்:

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாட்களுக்கு 300 டி.எம்.சி. வரை தண்ணீர் தேவைப்படும். பாசன பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தேவை குறையும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழையை எதிர் நோக்கி ஜூன் 12-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

கடந்த ஆண்டு அணையின் நீர் இருப்பும், நீர்வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் குறித்த நாளான ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ததால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று மாலை காவிரி பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதனால் கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி முதல் நேற்று மாலை வரை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 164.97 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 250.04 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த ஆண்டை விட மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு 85 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலமும், மழையின் காரணமாகவும் மேட்டூர் அணைக்கு நடப்பு நீர்பாசன ஆண்டில் 200.14 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு படி கர்நாடகா ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 12 மாதங்களில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும், ஆனால் தற்போது வரை 200.14 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துள்ளதால் கர்நாடகாவில் இருந்து கூடுதலாக 22.89 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வந்துள்ளது.

நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக 1500 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு 1034 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 105.98 அடியாக இருந்தது.
Tags:    

Similar News