செய்திகள்
கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற 4 டன் மஞ்சள் பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2021-01-27 09:55 GMT   |   Update On 2021-01-27 09:55 GMT
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 4 டன் மஞ்சளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி:

இலங்கை அரசு அந்நாட்டின் விவசாயிகளுக்கு ஆதரவாக மஞ்சள் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதால் அங்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து மஞ்சள் கடத்தப்படுகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மஞ்சள் கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுவதும், அதனை கடலோர போலீசார் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக கடலோர போலீசார், துறைமுக போலீசார் கடலில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து லாரி மூலமாக கொண்டு சென்று கடல் வழியாக மஞ்சள் கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி முத்தையா புரத்தை அடுத்துள்ள கோவளம் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றபோது அவ்வழியாக வந்த லாரியை வழிமறித்தனர். உடனே லாரியில் இருந்த டிரைவர் உள்பட 4 பேர் போலீசாரை பார்த்ததும் இறங்கி தப்பியோட முயன்றனர். போலீசார் 4 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

இதில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் உள்ளிட்டவற்றை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை சோதனை செய்ததில் அதில் மஞ்சள் தூள் 1.5 டன், விரலி மஞ்சள் 2.8 டன், ஏலக்காய் 125 கிலோ மற்றும் சிகரெட் தாள் 125 பெட்டி உள்ளிட்டவைகள் என 4.3 டன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கியூ பிரிவு போலீசார் அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News