செய்திகள்
கொரோனா தடுப்பூசி

40 சதவீதம் மருத்துவ பணியாளர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டிருக்கின்றனர்

Published On 2021-01-26 01:49 GMT   |   Update On 2021-01-26 01:49 GMT
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 40 சதவீதம் மருத்துவ பணியாளர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 299 ஆண்கள், 241 பெண்கள் என மொத்தம் 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 157 பேரும், கோவையில் 56 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரத்தில் தலா 3 பேரும், அரியலூர், தேனி, விருதுநகரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் புதிய பாதிப்பு இல்லை. இந்த பட்டியலில், 12 வயதுக்குட்பட்ட 35 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 119 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 53 லட்சத்து 86 ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகம் வந்த 941 பேரில், 667 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 641 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 24 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 26 பயணிகளுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 6 இங்கிலாந்து பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேர் என 9 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 7 பேர் தற்போது ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு புதிய வகை கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தலா இருவரும் என 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். சென்னை, கோவை, கடலூர், திருவள்ளூரில் தலா ஒருவரும் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 12,320 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 627 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 209 பேரும், கோவையில் 68 பேரும், செங்கல்பட்டில் 39 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 147 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 4 ஆயிரத்து 813 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 940 பேர், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,034 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக 4,571, பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேருக்கு என மொத்தம் 7 ஆயிரத்து 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மேலும் நேற்று ஒரே நாளில் 7,145 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 162 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 7,307 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழகத்துக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 100 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து ‘டோஸ்கள்’ வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 69 ஆயிரத்து 27 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 67 ஆயிரத்து 514 பேர் ‘கோவிஷீல்டு’ மருந்தும், 1,701 ‘கோவேக்சின்’ மருந்தும் செலுத்தி உள்ளனர். இது 40.58 சதவீதம் ஆகும்.
Tags:    

Similar News