செய்திகள்
ஜவாஹிருல்லா

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. நிர்பந்திக்கவில்லை- ஜவாஹிருல்லா பேட்டி

Published On 2021-01-24 09:49 GMT   |   Update On 2021-01-24 09:49 GMT
உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் திமுக நிர்பந்திப்பதாக கூறுவது தவறான தகவல். அவ்வாறு எந்த நிர்பந்தமும் அவர்கள் விதிக்கவில்லை என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

நெல்லை:

சட்டசபை தேர்தல் தொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் தென் மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் முஸ்லிம் ஜமாத் தலைவர்களை சந்தித்து முஸ்லிம்கள் உரிமைகளுக்கு என்றென்றும் பாடுபடுவதாக கூறி உள்ளார்.

அவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அ.தி.மு.க. அரசு அதனை தடுக்கும் என்று கூறி உள்ளார். அப்படி கூறுபவர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்து இருந்தால் அது நிறைவேறி இருக்காது.

இஸ்லாமியர்களை அன்னியராக கருதவில்லை என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். இதுபோன்ற எண்ணம் தேர்தல் நேரத்தில் தான் அவருக்கு ஏற்படுகிறது. தேர்தல் விரைவில் வர உள்ளதால் தோல்வி பயத்தில் அவர் இதுபோன்ற சந்திப்புகளை நிகழ்த்துகிறார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்தே மனிதநேய மக்கள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடுகிறது. அதேபோல் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தனி சின்னத்தில் போட்டியிடுவோம்.

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தி.மு.க. கூட்டணியில் தேவையான இடங்களை கேட்டு பெறுவோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் நல்ல முடிவை எடுப்பார்.

அவர் கூட்டணி கட்சிகளை நல்லிணக்கத்தோடு அழைக்கிறார். உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்திப்பதாக கூறுவது தவறான தகவல். அவ்வாறு எந்த நிர்பந்தமும் அவர்கள் விதிக்கவில்லை.

சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அப்போது அவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அவர் விடுதலை யாகும் நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குருமூர்த்தி போன்றவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக கூறிய கருத்துக்களும் இதில் வேறு ஏதும் சதி நடந்துள்ளதா என சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா வெளியே வந்தால் யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்களோ அவர்கள் செய்த கூட்டு சதியாக நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News