செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் கடந்த ஆண்டு 46 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சில் பிரசவம்

Published On 2021-01-22 07:35 GMT   |   Update On 2021-01-22 07:35 GMT
கொரோனா அச்சம் காரணமாக கர்ப்பிணிகள் பலர் பிரசவ நேரத்துக்கு முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.
கோவை:

கொரோனா கால ஊரடங்கால் கடந்த ஆண்டு கோவையில் சாலை விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், 108 ஆம்புலன்ஸ் பயன்பாடு குறையவில்லை.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்வதற்காகவும், பிரசவ காலங்களில் கர்ப்பிணிகளை அழைத்துச் செல்லவும் ஆம்புலன்சுகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கோவையில் 38 ஆக இருந்த ஆம்புலன்சுகளின் எண்ணிக்கை ஒரு ஆண்டில் 59 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் கோவை, நீலகிரி மாவட்ட மேலாளர் செல்வமுத்துக்குமார் கூறியதாவது:-

2020-ல் கோவை மாவட்டத்தில் 7,689 சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர். 2019-ல் 10,013 சாலை விபத்துகளில் ஆம்புலன்ஸ் உதவி கோரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் ஜூன் வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கே விபத்துகள் குறைய காரணம்.

கொரோனா அச்சம் காரணமாக கர்ப்பிணிகள் பலர் பிரசவ நேரத்துக்கு முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. பொது போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டதால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்தது.

2020-ல் 46 பிரசவங்கள் ஆம்புலன்சிலேயே நிகழ்ந்துள்ளன. 104 பிரசவங்கள் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுடன் வீட்டில் நடந்துள்ளன. மொத்தம் 8,982 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் உதவி தேவைப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 9,885 கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் ஆம்புலன்ஸ் சேவை நேரமும் கடந்த 4 மாதங்களில் 15 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறைந்துள்ளது. புதிதாக 21 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டதே இதற்கு காரணம். மேலும் அதிக விபத்து நேரிடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News