செய்திகள்
கைது

3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டு துப்பாக்கி வாங்கி கொடுத்தவர் கைது

Published On 2021-01-11 02:36 GMT   |   Update On 2021-01-11 02:36 GMT
சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டுத்துப்பாக்கி வாங்கி கொடுத்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்:

சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில் சந்த், அவருடைய மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல்குமார் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா, அவருடைய தம்பிகள் கைலாஷ், விகாஷ் மற்றும் நண்பர்கள் விஜய் உத்தம், ரபீந்த்ரநாத்கர், ராஜூ ஷின்டே, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜிவ்துபே ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் ராஜிவ் துபே தவிர்த்து மற்ற 6 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கைலாசுக்கு நாட்டு துப்பாக்கி வாங்கி கொடுத்த ராஜஸ்தானை சேர்ந்த சந்திரதீப் சர்மா (25) என்ற மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவரை சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த துப்பாக்கிசூடு வழக்கில் இவர்கள் 3 பேரையும் சுட்டுக்கொல்ல 2 துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அதில் ஒரு துப்பாக்கி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜிவ்துபே உடையது என தெரிந்து அவரை கைது செய்தனர். மற்றொரு துப்பாக்கி சந்திரதீப் சர்மா வாங்கி கொடுத்த நாட்டுத்துப்பாக்கி என தெரியவந்ததால் தற்போது அவரை கைது செய்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News