செய்திகள்
ஜவாஹிருல்லா

மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்- ஜவாஹிருல்லா

Published On 2021-01-08 09:18 GMT   |   Update On 2021-01-08 09:18 GMT
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் சம்பவம் மிகவும் மோசமான நிகழ்வு. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தகுந்த தண்டனையை வழங்க வேண்டும்.

வேறு மாநிலத்தை சேர்ந்த அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் உண்மையான அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான். ஆயிரம் அழகிரி வந்தாலும் தி.மு.க.வை அசைக்க முடியாது.

தி.மு.க. கூட்டணியில் யாருக்கெல்லாம் இடமளிப்பது என்பது குறித்து மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். அவரது முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

2009 முதல் கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை தனி சின்னத்தில் போட்டியிட்டு வருகின்றோம்.

எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கவுரமான இடங்களை பெற்று தனிசின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.
Tags:    

Similar News