செய்திகள்
வைகோ

ஏழை மக்கள் நலன் கருதி பயணிகள் ரெயில்களை இயக்க வேண்டும்- வைகோ

Published On 2020-12-19 05:45 GMT   |   Update On 2020-12-19 05:45 GMT
ஏழை மக்கள் நலன் கருதி பயணிகள் ரெயில்களை இயக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்குக்குப் பின்னர், ரெயில்வே துறையினர், பாதிக்கும் குறைந்த அளவிலேயே ரெயில்களை இயக்கி வருகின்றனர். அப்படி ஓடுகின்ற ரெயில்கள், முன்பு வழக்கமாக நிற்கின்ற பெரிய ரெயில் நிலையங்களில் கூட இப்போது நிற்காமல் ஓடுகின்றன. இதனால், தமிழகம் முழுமையும் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான தீப்பெட்டி ஆலைகள், கடலை மிட்டாய், பட்டாசு, விவசாயம், நூற்பு ஆலைத் தொழில்கள் நிறைந்த பகுதி கோவில்பட்டி ஆகும். இவை தவிர, மத்திய மாநில அரசு அலுவலகங்கள், தனியார், அரசு கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளும் நிறைய உள்ளன.

கோவில்பட்டி வழியாக நாள்தோறும் 27 பயணிகள் ரெயில்கள் இரு வழிகளிலும் ஓடிக்கொண்டு இருந்தன. முன்பதிவின் மூலமாக, நாள்தோறும் ரூபாய் 4 லட்சம் என ஆண்டுக்கு ரூபாய் பத்துக்கோடி, மதுரைக் கோட்டத்திற்கு வருவாய் பெற்றுத் தருவதால், கோவில்பட்டி நிலையம், ‘ஏ’ கிரேடு தகுதி பெற்று இருக்கின்றது.

ஆனால், இப்போது பாதி ரெயில்கள் தான் ஓடுகின்றன. அதிலும், நாகர்கோவில்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரையில் இருந்து நாள்தோறும் இரவு 11 மணிக்குப் புறப்படும் புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் அதிவிரைவு ரெயில் ஆகியவை, கோவில்பட்டி நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.

வாரந்தோறும் புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே ஓடுகின்ற, கன்னியாகுமரி டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளிக்கிழமை மட்டும் ஓடுகின்ற நாகர்கோவில்-சென்னை ஆகிய ரெயில்களும் கோவில்பட்டி நிலையத்தில் நிற்பது இல்லை. இதனால், ஏழை,எளிய, நடுத்தரப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தற்போது விரைவு ரெயில்களை மட்டுமே இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். பயணிகள் ரெயில்களை ஓட்டுவது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், தமிழகம் முழுமையும் லட்சக்கணக்கான மக்கள், அன்றாடம் பயணிகள் ரெயில்களைத் தான், தங்களுடைய தொழில், வேலைவாய்ப்புக்கு நம்பி இருக்கின்றனர். எனவே, பயணிகள் ரெயில்களையும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி என்ற பழந்தமிழ்ப் பெயர்களில் ஓடிக்கொண்டு இருந்த ரெயில்களின் பெயர்களையும் மறைத்து, சிறப்பு ரெயில்கள் என ஒரே பெயரில் இயக்குகின்றார்கள்.

இது தேவை அற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். வழக்கமான பெயர்களிலேயே ரெயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News