செய்திகள்
ரவுடி கொலை

விடுதலையான 4 நாளில் கொலையான ரவுடி- பரபரப்பு தகவல்கள்

Published On 2020-12-14 08:28 GMT   |   Update On 2020-12-14 08:28 GMT
மதுரையில் ஜெயிலில் இருந்து விடுதலையான 4 நாளில் ரவுடி கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:

மதுரை எஸ்.எஸ்.காலனி காளிமுத்து நகர், காந்திஜி தெருவை சேர்ந்த சின்னவீரன் மகன் கார்த்திக் (வயது 22). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று கார்த்திக் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் கார்த்திக்கை நோக்கி ஆயுதங்களுடன் பாய்ந்தது. வீட்டுக்குள் சென்று மொட்டை மாடி வழியாக தப்ப முயன்ற அவரை மர்ம கும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கார்த்திக் பலியானார்.

இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கார்த்திக் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு ரவுடியாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனால் அவருக்கும், வேறு சில ரவுடி கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இதில் சொக்கலிங்க நகர் 4-வது தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி (27) என்பவருக்கும், கார்த்திக்குக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த விரோதத்தில் கார்த்திக்கை தீர்த்து கட்ட செல்லப்பாண்டி திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில் கார்த்திக் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டதால் மாநகர போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் செல்லப்பாண்டியின் திட்டம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் கார்த்திக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து விடுதலையானார். இதனை அறிந்த செல்லப்பாண்டி சொக்கலிங்கநகர் சந்தான மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகப் பிரகாஷ் (26) மற்றும் பிரகாஷ் என்ற ஷியாம்சேது, கரண் மற்றும் பலருடன் சேர்ந்து கார்த்திக்கை தீர்த்துக்கட்ட ஆலோசித்தார்.

இதனை தொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து கார்த்திக்கை படுகொலை செய்து உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டி, சுகப்பிரகாஷ், பிரகாஷ் என்ற ஷியாம்சேது மற்றும் கரண் உள்பட பலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கார்த்திக்கின் தந்தை சின்னவீரன் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். எனவே தாய் போதும்பொண்ணுவுடன் கார்த்திக் வசித்து வந்தார்.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், எனக்கு உள்ளூரில் நிறைய எதிரிகள் உள்ளனர். அவர்கள் என்னை கொல்ல நேரம் பார்த்து கொண்டு உள்ளனர். எனவே நான் 2 நாட்களில் கேரளாவுக்கு சென்றுவிடுவேன் என்று தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் எதிரிகள் பலி தீர்த்து விட்டதாக அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News