செய்திகள்
கொலை

கயத்தாறு அருகே விவசாயி வெட்டிக்கொலை

Published On 2020-12-04 06:59 GMT   |   Update On 2020-12-04 06:59 GMT
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இன்று விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள வீரபாண்டிய புளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரம் (வயது 80), விவசாயி. இவரது மனைவி காளியம்மாள் (75). இவர்களுக்கு சண்முகராஜா, முருகன் என்ற 2 மகன்களும், வேல்தாய், வெயிலாச்சி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாகி வசித்து வருகின்றனர்.

மந்திரத்திற்கு அக்கிராமத்தில் 2 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் நேற்றிரவு உணவு அருந்தி விட்டு மற்றொரு வீட்டில் அவர் தனியாக தூங்கி உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் நீண்ட நேரமாக அவரது வீடு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் மந்திரம் உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் நவநீதகண்ணன் மற்றும் போலீசார் மந்திரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக விசாரணை நடத்தியதில் நள்ளிரவில் வீடு புகுந்த மர்மநபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

மந்திரத்திற்கு 2 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள இடம் தொடர்பாக மந்திரத்திற்கும், கோவில்பட்டியில் வசித்து வரும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடப்பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மந்திரத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

எனவே இப்பிரச்சினையில் முதியவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News