செய்திகள்
வைகோ

டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

Published On 2020-12-03 02:37 GMT   |   Update On 2020-12-03 02:37 GMT
மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுமையும் அரசு டாக்டர்கள் பெறுகின்ற ஊதியத்தை ஒப்பிடுகையில், மருத்துவத் துறையில், இந்தியாவில் 25-வது இடத்தில் இருக்கிற பீகார் மாநில அரசின் டாக்டர்கள் பெறுகின்ற ஊதியத்தை விட, தமிழக அரசு டாக்டர்கள் குறைந்த ஊதியத்தையே பெற்று வருகிறார்கள்.

மத்திய அரசு டாக்டர்கள், 13 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் பெறுகின்றபோது, மாநில அரசு டாக்டர்கள் ரூ.86 ஆயிரம் மட்டுமே பெறுகிறார்கள். இதனால், 14-வது ஆண்டு முதல், பணி ஓய்வு பெறுகின்ற வரையிலும், மத்திய அரசு டாக்டர்களை விட மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் குறைவான ஊதியத்தையே பெறுகிறார்கள்.

எனவே, 2017-ம் ஆண்டு முதல், தங்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் வழங்கக்கோரி, தமிழக அரசு டாக்டர்கள் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில், 2018-ம் ஆண்டு, ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்ய துறை சார்ந்த குழு அமைக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என, அக்குழு பரிந்துரை அளித்தது. அக்குழுவின் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, விரைந்து முடிவு எடுக்குமாறு, அதே ஆண்டு, சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை ஆணை பிறப்பித்தது.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News