செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 559 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 101.23 அடியாக அதிகரித்தது.
மேட்டூர் :
தமிழகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது.
இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 30-ந் தேதி 100.93 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 101.23 அடியாக அதிகரித்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 559 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.