செய்திகள்
குருதேவி, அவருடைய 3 மாத குழந்தை.

கமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

Published On 2020-11-28 03:36 GMT   |   Update On 2020-11-28 03:36 GMT
கமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது மேமுடிமன்னார்கோட்டை கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது24). இவருக்கும் தொப்புலாக்காரையை சேர்ந்த குருதேவி (20) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தை உண்டு. பொன்முருகன் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த குருதேவி மனமுடைந்து தனது உடலிலும் 3 மாத கைக்குழந்தை மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். ஆனால் படுகாயம் அடைந்த குருதேவியும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிபதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

குருதேவி மற்றும் அவருடைய குழந்தையின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து 1½ ஆண்டில் இளம்பெண் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டதால் பரமக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேல் மேல்விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News