செய்திகள்
புயல் பாதிப்பு: உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
நிவர் புயல் கரையை கடந்துள்ளது. அஞ்சிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பல இடங்களில் பயிர்களுக்கு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளும், சென்னையின் புறநகரில் பல அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றி நோய்ப்பரவலைத் தடுக்க வேண்டும். நிவர் புயல் மற்றும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளை, முக கவசம் அணிந்து கொண்டு, தேவையான பாதுகாப்புடன் பா.ம.க.வினர் வழங்க வேண்டும். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.