செய்திகள்
அரசு பேருந்துகள்

சேலத்தில் இருந்து சென்னை, பாண்டிச்சேரி, கடலூருக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தம்

Published On 2020-11-25 08:23 GMT   |   Update On 2020-11-25 08:23 GMT
நிவர் புயலால் சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
சேலம்:

நிவர் புயலால் சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 1220 பஸ்களில் 75 சதவீத பஸ்கள் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

இதில் 20 சதவீத குளிர்சாதன பஸ்கள், கொரோனாவால் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல பிற கோட்டங்கள் சார்பில் 2800 பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இதில் 120 குளிர்சாதன பஸ்கள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நிவர் புயலால் சென்னைக்கு பஸ்களை இயக்க வேண்டாம் என அதிகாரிகள் கிளை மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் எஸ்.இ.டி.சி. பஸ்களில் 530-ம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு நகரங்களில் இருந்து சேலம் மார்க்கமாக இயக்கப்படும் 58 எஸ்.இ.டி.சி. பஸ்களும் அடங்கும். இது தவிர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், கோவை, விழுப்புரம் கோட்டங்கள் சார்பில் இயக்கப்படும் 420 பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதில் சேலத்தில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 34 பஸ்கள், கடலூர் 20, பாண்டிச்சேரி 10, சிதம்பரத்திற்கு இயக்கப்படும் 8 பஸ்களும் அடங்கும். மேலும் புயல் கரையை கடந்த பின்னர் அதிகாரிகள் உத்தரவு படி அடுத்த கட்டமாக பஸ்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News